பெருலா அசபையிட்டி (Ferula assafoetida) என்ற தாவரவியல் பெயரைக் கொண்ட பெருங்காயத்தின் தாயகம் ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகும். உணவில் நறுமணம் ஊட்டக்கூடிய பொருள்களாகவும், சுவையூட்டியாகவும் பெருங்காயம் பயன்படுத்தப்படுகிறது. பெருங்காயம் (Assafoetida) என்பது தாவரத்தின் வேரிலிருந்து எடுக்கப்படும் பாலின் உலர்ந்த நிலையே. பெருங்காயம் வெள்ளை மற்றும் கறுப்பு நிறங்களில் ரகத்திற்கு ஏற்றார் போல் எடுக்கப்படுகிறது. 4 வருடம் ஆன தாவரம் பெருங்காய பால் எடுக்கும் நிலைக்கு வருகிறது. பெருங்காய தூள் என்பது பெருங்காயம் அரிசிமாவு கலந்த கலவையே ஆகும்.
நூறு கிராம் பெருங்காயத்தில் அடங்கியுள்ள சத்துகளாவன… கார்போஹைட்ரேட் – 67 கிராம், புரதம் – 4 கிராம், கொழுப்பு – 1.1 கிராம், நார்ச்சத்து – 4.1 கிராம், கால்சியம் – 690 மில்லிகிராம், பாஸ்பரஸ் – 50 மில்லிகிராம், இரும்பு – 39 மில்லிகிராம், மக்னீசியம் – 80 மில்லிகிராம், மாங்கனீஸ் – 1.1 மில்லிகிராம் ஆகியன ஆகும்.
பயன்கள்:
குழந்தை பெற்ற தாய்மார்களின் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற பெருங்காயம் கொடுக்கும் பழக்கம் வழக்கத்தில் உள்ளது. மற்றும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிகளை பெருங்காயம் தணிக்கிறது.
ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் வயிற்றுப் பிரச்சனைகளுக்கு மருந்தாக பெருங்காயம் கொடுக்கும் வழக்கம் உள்ளது. பெருங்காயம் செரிமானத்திற்கு உதவியாகவும், வாயு அகற்றியாகவும் குடல்புழு அகற்றியாகவும் செயல்படுகிறது.
பெருங்காயம் சுவாச உந்தியாகவும், கோளை அகற்றியாகவும், சுவாச குழாய் புண்களை குணப்படுத்தும் திறன் உள்ளதாகவும், ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் திறன் உள்ளதாகவும் செயல்புரிகிறது.
பெருங்காயத்தில் உள்ள பெரிலிக் அமிலம், அம்பல்லிபெரினின் ஆக்ஸிஜனேற்ற தடுப்பானாக செயல்புரிந்து நோய் எதிர்ப்பு சக்தியை உடலுக்கு அளிக்கிறது.
பெருங்காயத்தில் இரத்த உறைதலைத் தடுக்கும் கவமரின் என்ற பொருள் இருப்பதால் இரத்தத்தை மெலியூட்டி இரத்த கொழுப்பை குறைத்து உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
பன்றிக்காய்ச்சல் மற்றும் இன்புழுவென்சா ஏற்படுத்தும் வைரஸை எதிர்த்து போராடும் சக்தி பெருங்காயத்தில் உள்ளது என ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
போதை பொருள்களால் ஏற்படும் நச்சுகளை முறிக்கும் நச்சுமுறிப்பானாகவும் பெருங்காயம் செயல்புரிகிறது.

கருத்துகள்
கருத்துரையிடுக